க.பரமத்தி, ஏப்.11: பங்குனி உத்திரத்தையொட்டி பழநி செல்ல, மாலை அணிந்த முருக பக்தர்கள் கோயிலுக்கு பாதயாத்திரை செல்ல தொடங்கினர். க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர்கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், புஞ்சைகாளகுறிச்சி, புன்னம், இராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி ஆகிய 30-ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி கிராமப்பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆண்டு தோறும் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம மக்கள் சிலர் பங்குனி உத்திரத்தன்று அருகேயுள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். இன்னும் பலர் பழநிமலை முருகன் கோயிலுக்கு தீர்த்தக் காவடிகளுடன் குழுவினராக சென்று வழிபடுவர். இதற்காக பங்குனி முதல் தேதியன்று, கிராமங்களில் உள்ள விநாயகர் கோயில்களுக்கு சென்று ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவர். பங்குனி உத்திரம் நாள்களில் இருந்து குழுவினராக புறப்பட்டு கொடிமுடி காவிரி ஆற்றிற்கு சென்று, கலசங்களில் காவேரி தீர்த்தம் கொண்டு வருவர். விழாவிற்கு முதல் நாளன்று கொடிமுடியிலிருந்து கொண்டு வந்த தீர்த்தக் கலசங்களை சுமந்தபடி பாதயாத்திரையாக சென்று, மறுநாள் அதிகாலை பழநியை அடைவர்.
The post பங்குனி உத்திர விழாவையொட்டி முருக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை துவக்கம் appeared first on Dinakaran.